இனி பொது இடத்தில் புகை விட்டால் ரூ. 1000 அபராதம்.. சில்லறை விற்பனைக்கும் வருகிறது தடை!
டெல்லி: சிகரெட் உபயோகிப்பாளர்களுக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் சில்லறையாக சிகரெட் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய முடிவுப்படி இனிமேல் பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு ரூ. 200க்குப் பதில் ரூ. 1000 அபராதமாக விதிக்கப்படும். இதற்கான முடிவை நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்தது.
பொது இடங்களில் புகை பிடிப்போரை தடுக்கும் வகையிலும், புகையிலை பழக்கங்கள் சார்ந்த புற்று நோய் மரணங்களை தவிர்க்கும் வகையிலும் புதிய புகையிலை (பயன்பாடு மற்றும் தடுப்பு) சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு புகையிலை உற்பத்தியாளர்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளை முன்வைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
அதில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்குவோர் மற்றும் உபயோகிப்பவர்களின் வயது உச்சவரம்பை தற்போதைய 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது, முழு பாக்கெட்டாக அன்றி சில்லரையில் சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்வது போன்ற கடுமையான பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும், தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் 200 ரூபாய் அபராதத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரபல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் புகை பிடிப்போருக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பகுதிகளுக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான திருத்தச் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும். இது சட்டமாக ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்த சட்டங்களை மீறுவோர் மீது தற்போது விதிக்கப்படும் அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.