சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடியில் கேரளா அணை கட்ட மத்திய அரசு தடை #siruvani
சிறுவாணி ஆற்றில் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா அணைக்கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லி: சிறுவாணி ஆற்றில் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா அணைக்கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது. அட்டப்பாடி அணை கட்டும் திட்டத்தை நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டபாடி பகுதியில் அகழி மற்றும் சோலையூர் பஞ்சாயத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் 450 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது. இங்கு அணைகட்டுவது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது.
சிறுவாணி ஆற்றில் கேரளா அணை கட்டும் பணியை தொடங்கிய உடனேயே தமிழகத்தின் கொங்குமண்டலப் பகுதிகளில் பதற்றம் சூழ்ந்தது. கொந்தளித்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், அணை கட்டும் பணிகளை கேரள அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். இதற்காக, அணை கட்டப்படவுள்ள சித்தூர் பகுதியில், நூற்றுக்கணக்கான லாரிகளில் கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டன.
சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களிலும் ஈடுபட்டனர். கேரளாவின் அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதில், தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இசைவு பெறாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே சிறுவாணியில் அட்டப்பாடியில் கேரளா அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணைக கட்ட மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அட்டப்பாடியில் கேரளா அணை கட்டும் திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
அணை கட்டுவது தொடர்பாக மத்திய வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசின் ஓப்புதல் பெறும் வரை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான தமிழக அரசின் வழக்குகள் முடியும் வரை திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு கொங்கு மண்டல மாவட்ட மக்களிடையே நம்பிக்கையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.