ராஜ்யசபாவில் இன்று தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா.. நிறைவேறுமா?
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று சரக்கு சேவை மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து பேசினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களில் அனல் பறந்தது. அதிமுக இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால் இந்த மசோதா நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜி.எஸ்.டி. மசோதாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த மசோதா கடந்த ஆண்டு மே மாதம் லோக்சாபவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இங்கு பாஜக தனிப் பெரும்பான்மையுடன் உள்ளதால் இது எளிதாக நிறைவேறி விட்டது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடையாது. அங்கு பலமாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா நிறைவேறாமல் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸையும், இதர எதிர்க்கட்சிகளையும் வளைக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை பரிந்துரைத்தது. அதில் ஒரு பரிந்துரையை மட்டும் மத்திய அரசு ஏற்றுள்ளது. திருத்தங்களுடன் கூடிய மசோதாவை இன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து பேசினார். முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் பேசும் போது இந்த மசோதாவின் இருதயமே வரிகள்தான். 18 சதவீதத்திற்கும் அதிகமாக வரிகள் விதிக்கக் கூடாது. உலகம் முழுவதும் மறைமுக வரி 14.1 சதவீதம் முதல் 16.8 சதவீதமாகத்தான் உள்ளது என்றார்.
இந்த மசோதாவிற்கு அதிமுக கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஓட்டெடுப்பில் 3ல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களது உறுப்பினர்களை கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுமா என்பது பாஜக தரப்புக்கு பெரும் பதட்டமாகவே உள்ளது.