பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மாநில அரசுக்கு தர்மேந்திர பிரதான் நறுக் கேள்வி!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்ட நிலையில் வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது போல மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு கண்டது மக்கள் மத்தியல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜூன் மாதம் முதல் தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யத் தொடங்கியதில் இருந்து பெட்ரோல் விலை ரூ. 74ஐயும், டீசல் விலை ரூ. 64 வரையும் எட்டியது.
இந்நிலையில் நேற்று கலால் வரியில் ரூ. 2ஐ குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.60 வரை குறைந்துள்ளது. இத்னிடையே வாட் வரியை மாநில அரசுகள் 5 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையில் அதிக ஆதாயம் பெருவது மாநில அரசுகளே. மதிப்பு கூட்டு வரியோடு 42 சதவீத கலால் வரியையும் மாநிங்கள் பெறுகின்றன.
மாநிலங்கள் 26 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை வாட் வரி வசூலிக்கின்றன. மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் அவற்றில் 5 சதவீதத்தை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி விரைவில் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.