மேற்கு வங்க அரசை கலைக்க மத்திய அரசு சதி.. மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
கொல்கத்தா: மேற்கு வங்க அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில் கடந்த 4-ம் தேதி மதக்கலவரம் வெடித்தது. பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவாகியது. பின்னர் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.
கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வராததால், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்தி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் சில இடங்களில் நடைபெறும் கலவரங்களுக்கு மத்திய அரசே காரணம். பாசிராத்தில் இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டியதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு உதவவில்லை. கலவர பகுதியில் மத்திய அரசு கூடுதல் படைகளை அனுப்பவில்லை.
பாதுரியா மற்றும் பஷீர்ஹட் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த விசாரணையின் மூலம் சம்பந்தபட்டவர்கள் யார் என்பதை காண விரும்புகிறோம். மாநில எல்லை பகுதியில் உள்ள பகுதிகளில், பிரச்சினை ஏற்படும் வகையில் பாஜகவுக்கு மிகவும் வேண்டப்பட்ட வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டன.
மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு செயல்படவில்லை. கலவரத்தின் மூலம் மேற்கு வங்க அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.