இந்திய வங்கிகளின் உயிர்நாடி பிரச்சினைகளை அலசப் போகும் 2 நாள் இந்திய வங்கித் துறை மாநாடு
டெல்லி: 2 நாள் இந்திய வங்கித் துறை மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய வங்கிகள் சந்தித்து வரும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் நிறைவாக இதுதொடர்பான அறிக்கை ஒன்றும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக்கும், பொருளாதார கொள்கை பகுப்பாய்வு அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. துறைக்கு நன்மை பயக்கக் கூடிய ஒவ்வொரு அம்சமும் இந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது. இந்திய வங்கித் துறைக்கு நீண்ட கால பலன்களைத் தரும் திட்டங்களை பரிந்துரைக்கும் அறிக்கையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோபால் கிருஷ்ண அகர்வால் ஒன்இந்தியாவிடம் பேசுகையில், இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு அம்சமும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் போகும் அறிக்கையில் இடம் பெறும். இந்த மாநாட்டில் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய வங்கித் துறையில் நடைபெறும் ஒவ்வொரு அம்சம் குறித்தும், வங்கித் துறைக்கு நன்மை பயக்கக் கூடிய விஷயங்கள் குறித்தும் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
மொத்தம் நான்கு துறைகளிலிருந்து பிரநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை முறைப்படுத்தும் அமைப்புகள், நுகர்வோர் மற்றும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், சிந்தனாவாதிகள் அடங்கிய குழு என மொத்தம் நான்கு பிரிவுகளில் இந்த மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பல்வேறு பிரிவுகளாக பிரித்து விவாதம் செய்யும்போது பல்வேறு யோசனைகள் கிடைக்கும், பல பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வை கண்டறிய முடியும். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் வழி பிறக்கும். வங்கியாளர்கள் மட்டுமல்லாமல் நுகர்வோர்களுக்கும் இது உபயோகமாக இருக்கும் என்றார் அகர்வால்.
இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வங்கித் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கும். மிகப் பெரிய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க மிகப் பெரிய அளவில் நிதியாதாரங்கள் தேவைப்படும். எனவே இதைச் சுற்றி விவாதங்கள் இருக்கும். எப்படி பொருளாதார நிதியாதாரங்களை விரிவுபடுத்துவது, வளர்ச்சித் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதங்கள் இடம்பெறும். இந்த மாநாட்டில் சில முக்கிய தீர்வுகளையும் காண முடியும் என்றும் மாநாட்டு அமைப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
டெல்லியில் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.