"வழுக்கி"க் கொண்டு ஓடிய "ஜட்டி, பனியன்" திருடர்களை மடக்கிப் பிடித்த மும்பை போலீஸ்!
மும்பை: ஜட்டி, பனியன் அணிந்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை நகரின் போரிவிலி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் வயதான தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு கும்பல் திடீரென தாக்கிவிட்டு, அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இவர்கள் தப்பிச் செல்லும்போது, ரோந்தில் இருந்த போலீசார் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து விரட்டினர். கொள்ளையர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் காயம் அடைந்தனர். போலீசாரும் பதிலுக்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலுக்கு பிறகு, கொள்ளையர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் சிலர் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 4 பேரும் காயம் அடைந்ததால், அவர்கள் காந்திவிலியில் உள்ள சதாப்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கைதான கொள்ளையர்கள் விரார்-வாசி, டோம்பிவிலி, கல்யாண் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஜட்டி, பனியன் மட்டுமே அணிந்து உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை யாராவது பிடித்தாலும் கையில் சிக்காத வகையில் தப்புவதற்காக உடம்பில் எண்ணெய் பூசி இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.