ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்த 'சாய்வாலா' மோடி
டெல்லி: ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ராஷ்ட்ரபதி பவனில் தனக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நேராக ராஜ்காட் சென்ற அவர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அங்கு மரக்கன்று ஒன்றை அவர் நட்டு வைத்தார்.
அதன் பிறகு அவர் ஹைதராபாத் ஹவுஸ் சென்றார். அங்கு அவருக்கு மோடி மதிய விருந்து அளித்தார். விருந்தின்போது அவர்கள் இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். ஹைதராபாத் ஹவுஸ் பூங்காவில் இருவரும் சிறிதுநேரம் நடந்து கொண்டே பேசினர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் இருவரும் அமர்ந்தனர். அப்போது மோடி ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்தார். தேர்தல் நேரத்தில் தான் ஒரு டீக்கடைக்காரன் என்று மேடைதோறும் முழங்கி வாக்கு கேட்டவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
டீ குடித்த பிறகு மீண்டும் ஒபாமாவும், மோடியும் பேச்சுவார்த்தையை துவங்கினர்.