காங். தலைவராகும் ராகுல்... பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை இனியாவது உருவாக்குவாரா?
காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் ராகுல் காந்தி இனியாவது பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை உருவாக்குவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. மகுடம் சூட்ட தயாராகிவிட்ட ராகுலுக்கு நிச்சயம் அது கடினமான முட்களுடன் கூடிய கிரீடம் என்பது தெரியாமல் இருக்காது.
நேரு, காமராஜர், இந்திரா, என மாபெரும் ஆளுமைகள் அமர்ந்து கோலோச்சிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் உட்கார இருக்கிறார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னரே காங்கிரஸின் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குறியானது.
இருந்தபோதும் அதன் நீண்டகால இருப்பு, கூட்டணிக் கட்சிகள் ஆகியவற்றால் ஆட்சிக் கட்டிலில் உட்கார முடிந்தது. ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத பெரும் தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது.
படுகேவலமான தோல்வி
மொத்தமே 44 இடங்களில்தான் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ்.
துரத்திய திரிணாமுல்
மாநில கட்சிகளான அதிமுக 37 இடங்களைக் கைப்பற்றி 3 -வது இடத்தையும் 34 இடங்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் 4-வது இடத்தையும் கைப்பற்றின. இப்படியான மிக பரிதாபகரமான சூழ்நிலையில்தான் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.
திசை திருப்பும் யுக்திகள்
இன்னொருபுறம் மத்தியில் ஆளும் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. ஆனாலும் அதை மடைமாற்றுகிற நடவடிக்கைகள், இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துகிற வியூகங்களை எதைப் பற்றியுமே கவலைப்படாமல் செய்து கொண்டிருக்கிறது பாஜக.
விமர்சனங்கள் மட்டும்தானா
ராகுல் காந்தியைப் பொறுத்தவரையில் தற்போதுதான் அரசியலில் சற்று முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பயணிக்க வேண்டியது மிக நீண்ட தொலைவு. மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை முன்வைத்துதான் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் இதுஒன்று மட்டுமே வாக்குகளாக மாறிவிடாது என்பதை ராகுல் உணர வேண்டும்.
பகிரங்கப்படுத்தனும்
பாஜகவை விமர்சிக்கும் ஒவ்வொன்றும் காங்கிரஸ் கட்சி மாற்றாக எதை முன்வைக்க விரும்புகிறது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை இப்படி நடைமுறைப்படுத்தவே கூடாது என்று சொல்லுகிற ராகுல் காந்தி, எப்படி நடைமுறைப்படுத்தியிருந்தால் மக்களுக்கு பாதிப்பு இருந்திருக்காது என்பதையும் விளக்கினால்தான் வாக்குகளாக மாறும்.
கூட்டணி அவசியம்
அதேபோல் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒரு கூட்டணியில் திரள வைப்பது என்பது காங்கிரஸ் தலைவராகப் போகிற ராகுல் காந்தி முன்பு இருக்கும் ஆகப் பெரும் சவால். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தனித்து வெல்ல முடியாது என்பது நாடறிந்த உண்மை. ஆகையால் வலிமையான கூட்டணியை இப்போதிருந்தே கட்டமைக்க வேண்டியது மிக முக்கியமானது.
காங்கிரஸ் சீரமைப்பு அவசியம்
மேலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போயிருக்கும் உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் தேடி கண்டுபிடித்து புனரமைப்பு செய்தாக வேண்டியதும் ராகுலுக்கான மிகப் பெரிய சவால்களாக இருக்கும். அத்துடன் கோஷ்டி பூசல்களால் நாறி கிடக்கும் மாநில காங்கிரஸ் தலைவர்களை ஒற்றுமைப்படுத்துவது என்பதும் ராகுலின் ஆளுமைக்கு விடப்படுகிற சவாலாக இருக்கும்.
அடுத்த தலைமுறை
பாஜகவைப் போலவே சமூக வலைதளங்களில் குதிரை பாய்ச்சலை வெளிப்படுத்துகிறது காங்கிரஸ். அதேநேரத்தில் ராகுலுக்கு அடுத்த 2-ம் கட்ட இளம் தலைவர்களை காங்கிரஸில் தேட வேண்டிய நிலைமை இருக்கிறது. பாஜகவில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட போது அவருக்கான வியூகங்களை வகுத்துச் செயல்படுவதில் அமித்ஷா தலைமையிலான கட்சி இருந்தது. அதேபோல காங்கிரஸும் வலிமையான 2-ம் கட்ட தலைவர்களை முன்னிலைப்படுத்தி வியூகம் வகுத்தால் கவுரமான வெற்றி தோல்விகளினூடே பயணிக்க முடியும்.