மாயாவதி விவகாரம்.. தயாசங்கர் நாக்கை வெட்டினால் ரூ.50 லட்சம் பரிசு - சண்டீகர் பகுஜன் அறிவிப்பு
சண்டீகர்: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கின் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அக்கட்சியின் சண்டீகர் பிரிவு தலைவர் ஜன்னத் ஜஹான் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மாவ் பகுதியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை காலை பேசிய தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் தேர்தலில் போட்டியிட மாயாவதி ஒரு கோடி ரூபாய்க்கு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கிறார். யாராவது ரூ.2 கோடி தர முன் வந்தால் அவருக்கு டிக்கெட்டை வழங்குகிறார்.
பிறகு யாரேனும் ரூ.3 கோடி தர தயார் என்றால், அவருக்கு விற்று விடுகிறார் என்று கூறிய அவர் மாயாவதியை விலை மாதுவுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து தயாசங்கர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும், தயா சங்கர் சிங் பாஜகவிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் தயாசங்கர் சிங்கிற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், மாயாவதி பற்றி தவறாக பேசிய தயாசங்கர் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் சண்டிகர் பிரிவு தலைவர் ஜன்னத் ஜஹான் அறிவித்து உள்ளார்.