மத்திய அரசு கட்டுப்படுத்த ஆந்திரம் ஒன்றும் தமிழகம் இல்லை... சந்திரபாபு நாயுடு கர்ஜிப்பு
மத்திய அரசு கட்டுப்படுத்துவதற்கு ஆந்திரம் ஒன்றும் தமிழகம் கிடையாது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Recommended Video
அமராவதி: தமிழகத்தை போல் ஆந்திரத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்தி விட முடியும் என நினைக்கிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி தேர்தலை சந்தித்து மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
அதுபோல் ஆந்திர அரசில் அங்கம் வகித்திருந்த பாஜகவினரும் மாநில அமைச்சரவையில் இருந்து விலகினர். இந்த நிலையில் பல்வேறு சமாதானப் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் நாயுடு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து ஆந்திர நலனுக்காக நேற்றைய தினம் இந்திராகாந்தி மைதானத்தில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். இதற்கு நீதிக்கான போராட்டம் என்று பெயரிட்டார். தெலுங்கு தேச கட்சி அமைச்சர்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதத்தை நடத்தினர்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது.
அதை எப்போதும் நடத்த விடமாட்டேன். மத்திய அரசுடனான இந்த போராட்டம் என் சுயநலம் அல்ல, மாநில நலத்துக்கானது என்றார் சந்திரபாபு நாயுடு.