குடியுரிமை சட்ட திருத்தம்- முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை? பாஜகவில் நேதாஜியின் பேரன் கலகக் குரல்
கொல்கத்தா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை? என்று மேற்கு வங்க பாஜக துணைத் தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமாகிய சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ச்சியாக பேரணிகளை நடத்தி வருகிறார். இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று கொல்கத்தாவில் பேரணியை நடத்தினார்.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளை அடுக்கி உள்ளார் சந்திரகுமார் போஸ்.
அதில், குடியுரிமை சட்ட திருத்தம் மத அடிப்படையிலானது அல்ல என கூறுகிறோம். பிறகு ஏன் இந்து, சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் மட்டும் இச்சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஏன் முஸ்லிம்களை இதில் சேர்க்கவில்லை? எதுவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது போலீஸ் வழக்கு
மேலும், இந்தியாவை பிற நாடுகளுடன் ஒப்பிடவும் முடியாது. இந்தியா என்பது அனைத்து மதம், சமூகத்தினருக்கானது என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் சந்திரகுமார் போஸ் பதிவு செய்துள்ளார். ஆனால் சந்திரகுமார் போஸின் இக்கருத்துகளுக்கு மேற்கு வங்க பாஜகவின் மற்றொரு துணைத் தலைவரான ஜெய் பிரகாஷ் மஜூம்தார் பதில் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜெய் பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், லோக்சபா, ராஜ்யசபாவில் இம்மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். முஸ்லிம்களை ஏன் இச்சட்ட திருத்தத்தில் சேர்க்கவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அமித்ஷாவின் பேச்சை சந்திரகுமார் போஸ் கவனிக்கவில்லை. இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸாரும் எழுப்பும் கேள்விகளையே சந்திரகுமார் போஸும் எழுப்புகிறார். 3 அண்டை நாடுகளில் இருந்து மதரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொன்டு அந்நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்குள்ளாக்கப்படுகிறவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கத்தான் புதிய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது என்பதை சந்திரகுமார் போஸ் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.