ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம்! லடாக் துணை நிலை ஆளுநர் ராதா கிருஷ்ணா
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் லெப்டினன்ட்-கவர்னராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
இதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த் ஆகஸ்ட் 5 ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டன.
அக்டோபர் 31 ம் தேதி முதல், காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குடியரசு தலைவர், அவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை நியமித்துள்ளார்.
மும்பை மெட்ரோபாலிட்டனில் நாங்கதான் கிங்.. பாஜக, சிவசேனா அசத்தல்.. என்ன காரணம்?
ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் சந்திரா முர்மு 1985 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாகும். நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அவரின், முதன்மை செயலாளராக இருந்தார்.
வரும் 31ம் தேதி 2 யூனியன் பிரதேசங்கள் உதயமாகும் நாளிலேயே, துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு விழா நடக்க வாய்ப்புள்ளது.
டெல்லியைப் போலல்லாமல், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அதிகாரம், புதுச்சேரி போல, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம்தான் இருக்கும்.
நிலைமை சீரடைந்ததும், காஷ்மீர் மீண்டும் மாநிலமாக மாற்றப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தலைவர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மேற்கண்ட நியமனங்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து நடைமுறைக்கு வரும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.