ஜெகனைத் தொடர்ந்து சந்திரபாபுவும் தெலுங்கானாவுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்!
தெலுங்கானா உருவாக்கக் கூடாது.. ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 3வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் இதே கோரிக்கைக்காக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு, ஆந்திர அரசியல் கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான மேட்ச் பிக்ஸிங்தான் தெலுங்கானா உருவாக்கம். எந்த ஒரு முறையான நடைமுறையும் மேற்கொள்ளாமலேயே தெலுங்கானா உருவாக்கப்படுகிறது. அரசியல் லாபங்களுக்காகவே இது உருவாக்கப்படுகிறது. ஆந்திராவில் என்ன நடந்தாலும் அதற்கு காங்கிரஸே பொறுப்பு என்றார்.
ஆனால் இந்த இருவருமே தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு அரசியல் லாபத்துக்காக நாடகமாடுகின்றனர் என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டாக இருக்கிறது.