மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயி.. இருவரின் கல்விச் செலவை ஏற்றார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு
அமராவதி: இரு மகள்களையே மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத ஆந்திர விவசாயிக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் டிராக்டர் வழங்கிய நிலையில் அந்த இரு மகள்களின் கல்விச் செலவை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார்.
கொரோனா லாக்டவுனால் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார உதவியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆட்கள் குறைப்பு, ஊதியம் குறைப்பு, தாமத சம்பளம் என மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது ஒரு புறமிருக்க சொந்தத் தொழில் செய்யும் விவசாயிகள், ஹோட்டல்கள் வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்கள் தொழிலை செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டரை வாடகைக்கு வாங்கவோ தொழிலாளர்களை பணியில் அமர்த்தவோ, மாடுகளை வாங்கவோ காசு இல்லாததால் அவரது இரு மகள்களையும் ஏரில் பூட்டி உழுதுள்ளார்.
சீனாவில் கொரோனா புதிய அலை.. கொத்துக் கொத்தாக பரவுகிறது.. ஏப்ரலுக்கு பின் மிகப்பெரிய ஸ்பைக்!
விவசாயம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் மார்புரியை சேர்ந்தவர் நாகேஸ்வர். இவர் மஹால்ராஜுபள்ளியிலிருந்து புலம்பெயர்ந்தவராவார். கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர் திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் அந்த கடையில் வருமானம் ஈட்ட முடியாததால் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.
வீடியோ வைரல்
இவருக்கு உதவியாக அவரது மனைவி லலிதாவும், மகள்கள் வெண்ணிலா மற்றும் சாந்தனா ஆகியோர் உள்ளனர். 2.5 ஏக்கர் நிலத்தில் பயிர் வைக்க ஏர் உழ வேண்டும். அதற்கு மாடுகளை வாங்கவோ டிராக்டரை வாடகைக்கு அமர்த்தவோ பணம் இல்லை. இதனால் தனது இரு மகள்களையும் மாடுகளை போல் பூட்டி ஏர் உழுத சம்பவம் வைரலானது. படிக்க வைக்கக் கூட முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
பெண் கல்வி
இந்த வீடியோ பாலிவுட் நடிகர் நடிகர் சோனு சூட்டிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஏர் உழுவதற்கு நாளை காலை அவரது கையில் இரு காளைகள் இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் திடீரென நாகேஸ்வர் குடும்பத்திற்கு டிராக்டரையே வாங்கிக் கொடுத்துவிட்டார் சோனு சூட்.
சந்திரபாபு நாயுடு
இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டரில் நடிகர் சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்து பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நாகேஸ்வர் குடும்பத்திற்கு டிராக்டர் அனுப்ப சோனு சூட் எடுத்த முயற்சிக்கு எனது பாராட்டுகள். அந்த விவசாயியின் இரு மகள்களின் படிப்புச் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களின் கனவு நனவாக நான் உதவுகிறேன் என தெரிவித்துள்ளார்.