ரூபாய் நோட்டு அறிவிப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பே தெரியுமாம்….ஜெகன்மோகன் திடுக் குற்றச்சாட்டு
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்த தகவல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று ஓஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்த தகவல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று ஓஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் மேலும் கூறியதாவது:
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சிலருக்கு முன் கூட்டியே தெரியும் என்று சொன்னார்.
ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஜெகன், ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு முன் 3 நாட்களுக்கு முன்பாகத்தான் சந்திரபாபு நாயுடு அவருக்கு சொந்தமான உணவுப் பொருள் நிறுவனத்தின் பங்குகளை விற்றதாகவும் கூறினார்.
கடந்த அக்டோபர் 22-ம் தேதி அதிக மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதமும் இதற்கு சான்று என்று ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தமக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டார் என்றும், இந்த விவகாரத்தினால் ஏழை-எளிய மக்கள் மட்டுமே பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற முக்கிய முடிகளை எடுப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் ஜெகன் தெரிவித்தார்.
கருப்பு பணத்தை ஒழிக்க அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்திருப்பது சரியான நடவடிக்கை என்றாலும், அதனை அமல் படுத்துவதில் மக்களுக்கு கடும் இன்னல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் குறிப்பிட்டார்.