மிஸ்டர் சந்திர பாபு நாயுடு? நீங்க ஒரு யு டர்ன் முதல்வர்... ஆந்திராவில் பொங்கிய அமித் ஷா
விஜயநகர்:ஆந்திர முதல்வரான, சந்திரபாபு நாயுடு யு டர்ன் முதல்வர், அவருக்கு இனி தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறக்காது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
ஆந்திராவின் மாநிலம் விஜயநகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோது சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். பின்னர் 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகி காங்கிரசில் ஐக்கியமானார்.
தேர்தலில் தோல்வி
பின்னர் 2014ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். இப்போது காங்கிரசை ஆதரிக்கிறார். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் தோல்வியுற்றவுடன் மெகா கூட்டணி என்று பேசுகிறார்.
மறுபடியும் முயல்வார்
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும். அப்போது எங்களுடன் வந்து இணைய மீண்டும் சந்திரபாபு முயற்சி செய்வார்.
சொல்வது இதை தான்
ஆனால், உங்களிடம் ஒன்று உறுதியாக சொல்ல விரும்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு எப்போதுமே சந்திரபாபுவுக்கு இனி திறக்காது. அவர் ஆந்திர மக்களை தவறாக வழிநடத்தியிருக்கிறார். அவரை யு டர்ன் முதல்வர் என்று அழைப்பதே பொருத்தமானது.
பழி போடும் நாயுடு
எப்போது ஆந்திர மக்கள் அவரது ஆட்சித் திறன் மீது அதிருப்தி கொண்டு ஆவேசமடைந்தனரோ... எப்போது அவர் அவரது மகனை முதல்வராக்கும் முயற்சியை மக்கள் எதிர்த்தனரோ... அப்போது பழியை பாஜக மீது போட்டு விட்டு சந்திரபாபு நாயுடு ஒதுங்கி கொண்டார்.
நன்மைகள் செய்துள்ளோம்
ஆனால் பாஜக ஆந்திர மாநிலத்துக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 37 லட்சம் கழிவறைகளை கட்டி உள்ளோம். 27 லட்சம் இளைஞர்களுக்கு முத்ரா வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். 6 கோடிக்கும் அதிக மானோருக்கு இலவச காஸ் சிலிண்டர்கள் கிடைத்துள்ளன.
ஏன் சேர்ந்தீர்கள்?
சந்திரபாபு நாயுடுவிடம் நான் கேட்க விரும்பியது இதைத்தான். ஆந்திராவுக்கு ரூ.5,56,000 அளவுக்கு நலத்திட்டங்கள் செய்த பாஜகவை விட்டுவிட்டு ஏன் வெறும் ரூ.1,17,000 கோடி அளவில் நன்மை செய்த காங்கிரசில் இணைந்தீர்கள்? தெலுங்கு தேச கட்சியும், காங்கிரசும் ஊழல் கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளாலும் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட முடியாது என்று பேசினார்.