அண்ணன், தம்பியால் சந்திரபாபு நாயுடுக்கு படுதோல்வி... மீளுமா தெ.தே?
அமராவதி: ஆந்திராவின் பவர் ஸ்டாரான நடிகர் பவன் கல்யாணின் புதிய கட்சியால், சந்திரபாபு நாயுடு தேர்தலில் தோல்வியடைந்து, அமைதியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் படுதோல்விக்கு நடிகர் பவன் கல்யாண் புதிதாக கட்சி தொடங்கியதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
மொத்தமுள்ள 171 சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 25 மக்களவைத் தொகுதிகளில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது ஆளும் கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது . இதன் மூலம் 40 ஆண்டு கால சந்திரபாபுவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!
தனி மாநிலம்
தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபுவின் சொந்த உழைப்பினால் உருவான கட்சியல்ல; அது மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் உருவாக்கிய கட்சி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த பின் ஆந்திராவை முன்னேற்ற அனுபவம் வாய்ந்த முதலமைச்சர் தேவை என்பதால் 2014 தேர்தலில் ஆந்திர மக்கள் சந்திரபாபுவை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என சொல்லப்படுகிறது.
ஜனசேனா கட்சி
நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியால், கடந்த 2009ல் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இந்தநிலையில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான, பிரபல நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்தார்.
பெரிய மாற்றம் இல்லை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சி, ஒரே ஒரு சட்டசபை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சி தலைவரான பவன் கல்யாண் போட்டியிட்ட 2 தொகுதியிலும் தோல்வி அடைந்தார். ஜனசேனாவின் வருகை ஆந்திர அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தா விட்டாலும், தெலுங்கு தேசத்திற்கு பாதிப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரும் பின்னடைவு
தமிழகத்தில் அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில், வாக்குகள் பெருவாரியாக பிரிந்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் அமமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதிமுக, ஒரே இடத்தை மட்டும் கைப்பற்றியது. இதே போல், ஆந்திராவில் உதயமான புதிய கட்சியால், சந்திரபாபுவின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கூடுதல் தொகுதிகள் கிடைத்திருக்கும்
குறிப்பாக, தெலுங்கு தேசத்திற்கு கிடைக்க வேண்டிய கபு சமூகத்தினரின் வாக்குகளை பவன் கல்யாண் பிரித்துள்ளார். 35 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அந்த தொகுதிகளில் பவன் கல்யாணின் ஜனசேனா கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. ஒருவேளை தேர்தலில் ஜனசேனா கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால், தெலுங்கு தேசம் கிட்டத்தட்ட 57 தொகுதிகளை கைப்பற்றி கவுரவமான தோல்வியையாவது பெற்றிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.