அரிதிலும் அரிது... சந்திரபாபு நாயடுவுக்கு தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு!
அமராவதி: ஆந்திர சட்டசபையின் தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைக்க இருக்கிறது.
அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கான தேர்தலும் நடந்தது. இதில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்தது.
நாளை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதைத்தொடர்ந்து, தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நிகழ்வும் நடைபெறும்..
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஆந்திராவின் புதிய சட்டசபையின் தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க இருக்கிறது. இது அரிதிலும், அரிதான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
புதிய ஆட்சி அமைக்கப்படும்போது தற்காலிக சபாநாயகர் பதவிக்கு சட்டசபையின் மிக மூத்த உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், மூன்று முறை முதல்வர், இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அந்தஸ்துடன் ஆந்திர சட்டசபையின் மிக மூத்த உறுப்பினராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
எனக்குப் பிடிச்ச அமைச்சர்கள் யார் யார்.. வாங்க ஜாலியா விளையாடலாம்!
தற்காலிக சபாநாயகர்தான் புதிய எம்எல்ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அத்துடன், புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் நடைமுறையும் அவர் மேற்பார்வையில்தான் நடைபெறும்.
ஆனால், சந்திரபாபு நாயுடு இந்த வாய்ப்பை ஏற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவரின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது ஒரு அரிய வாய்ப்பாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, சந்திரபாபு நாயுடு ஏற்காவிட்டால், அவருக்கு அடுத்ததாக உள்ள மிக மூத்த உறுப்பினர் கண்டா சீனிவாச ராவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.