தெலுங்கானா விவகாரம்: ஜனாதிபதி, ராஜ்நாத் சிங்கை சந்தித்த சந்திரபாபு நாயுடு
டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரணாபிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் மிகவும் முக்கியமான விஷயத்தை அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறது. பிரமதர் மன்மோகன் சிங்கோ ஆந்திர விவகாரத்தை ஏதோ காங்கிரஸ் கட்சியின் விவகாரம் போன்று பார்த்து அதற்கு ஒரு தீர்வு காணத் தவறிவிட்டார்.
போராட்டம் நடத்தி வரும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணுமாறு வேண்டி நான் பிரதமருக்கு கடந்த மாதம் 9 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினேன். ஆனால் மத்திய அரசு தெலுங்கானா பிரச்சனைக்கு தீர்வு காண இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கான விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நாயுடு பிரணாபை கேட்டுக் கொண்டார். ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ளது. ஆனால் காங்கிரஸோ சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பிரச்சனையை தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி வருகிறது என்று நாயுடு தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு
சந்திரபாபு நாயுடு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் வைத்து நேற்று சந்தித்து சுமார் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின்போது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று நாயுடு தெரிவித்தார். தெலுங்கானா பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விளக்கியதாக நாயுடு மேலும் தெரிவித்தார்.