திருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை: அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
நகரி: திருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இம்மாதம் 21ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 1-ந் தேதி தங்க ரத பவனி நடைபெறுகிறது.
இந்தாண்டு பிரமோற்சவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையப்பசாமி உலா வர இருக்கிறார். இதற்காக புதிய தங்க ரதம் தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய ரதத்தில் பிரேக் போட்டால் நிற்கும் வகையில் ஹைட்ராலிக் முறையில் இதன் சக்கரம் அமைக்கப்பட்டு உள்ளது சிறாப்பம்சம் ஆகும்.
இந்தப் புதிய தங்க ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ரதத்தின் சக்கரங்களின் செயல்பாடுகளை என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விழா தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏதேனும் வசதிக் குறைபாடு உள்ளதா என்றும், ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு மக்களிடையே உள்ள ஆதரவு குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘பக்தர்கள் தரிசனத்துக்கு 3 வரிசை அமுல்படுத்தப்பட்டதில் இருந்து நெரிசல் குறைந்து உள்ளது' என்று பதிலளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தர்ம தரிசனம் செய்யும் சாதாரண பக்தர்களுக்கு தேவஸ்தானம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.