புஷ்கரம் விபத்து: விசாரணைக்கு நாயுடு உத்தரவு.. பதவி விலகக் கோரும் எதிர்க்கட்சிகள்
ராஜமுந்திரி: மகா புஷ்கரம் விழாவில் 35 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உயிரிழக்கக் காரணம் ஆந்திரா முதல்வரும் குடும்பத்தினரும் ஆவணப்படத்தில் பங்கேற்றதுதான் என்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி கோதாவரி நதியில் கோட்டக்கும்பம் என்ற இடத்தில் 12 நாட்கள் நடக்கும் மகா புஷ்கர விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விழாவை தொடக்கி வைத்து குடும்பத்துடன் நீராடினர். அவர் நீராடிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீராட குவிந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்கள் உள்பட 35 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படமெடுக்க அனுமதி
இந்த சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடுவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்று தெரிந்து மணிக்கணக்கில் ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுத்தது ஏன்? சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினருடன் நீராடுவதை கேமராமேன்கள் படம் பிடித்தனர். இரண்டு மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பதவி விலகவேண்டும்
இந்த சம்பவம் குறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி, லட்சக் கணக்கான பக்தர்கள் முதல் நாளே வருவார்கள் என அறிந்திருந்தும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாததால்தான் இந்த மாபெரும் சோகம் நடந்தேறி உள்ளது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார் சிரஞ்சீவி.
நீதி விசாரணை
இதனிடையே இந்த சோக சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். எதிர்பாராத வகையில் இந்த சம்பவம் நடந்து விட்டது. பக்தர்களை ஒரே நேரத்தில் புனித நீராட அனுமதித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பக்தர்களுக்கு பாதுகாப்பு
இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க புஷ்கர விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மிகப்பெரிய விபத்து நடைபெற்ற நிலையில் புஷ்கர விழாவின் 2வது நாளான நேற்று அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.