இன்று சீமாந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார்!
விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சீமாந்திராவின் முதல் முதல்வராக இன்று இரவு பதவியேற்கிறார்.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு சீமாந்திரா தனி மாநிலமாகவும், தெலுங்கனா தனி மாநிலமாகவும் மாறியுள்ளது.
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைப் பிடித்துள்ளது. சந்திரசேகர ராவ் அங்கு முதல்வராகியுள்ளார். சீமாந்திராவாக பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாயுடு அதன் முதல்வராகியுள்ளார்.
இன்று பதவியேற்பு
நாயுடு இன்று முதல்வராகப் பதவியற்கிறார். இன்று இரவு 7.27 மணிக்கு அவர் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
விஜயவாடா - குண்டூர் நடுவே
விஜயவாடா, குண்டூர் இடையே உள்ள நாகார்ஜுனா நகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ஆளுநர் நரசிம்மன் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சர்களும் பதவியேற்பு
நாயுடுவுடன் சில அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஆனால் எத்தனை பேர் என்பது தெரிவிக்கப்படவில்லை.
15 மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
விழாவில் 15 மத்திய அமைச்சர்கள், 6 மாநில முதல்வர்கள், சினிமா நடிகர் நடிகையர், பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். முதல்வர்களில் குஜராத், சட்டிஸ்கர், ராஜஸ்தான், ஒடிஷா, பஞ்சாப், கோவா முதல்வர்களும் அடக்கம்.
ஜெகன் மோகன் ரெட்டி புறக்கணிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் நாயுடுவே அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் வர மாட்டார்கள் என்று தெரிகிறது.
புதிய தலைநகர் குறித்த அறிவிப்பு
முதல்வராகப் பதவியேற்றவுடன் பல்வேறு திட்டங்களை நாயுடு அறிவிக்கவுள்ளார். அதில் புதிய தலைநகர் குறித்த அறிவிப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.