எங்கிட்ட மோதுனீங்கன்னா… உங்க கதை முடிந்துவிடும்.. பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த சந்திரபாபு நாயுடு
காக்கிநாடா: என்னிடம் மோத நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று பாஜகவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுத்துள்ள எச்சரிக்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக காக்கிநாடா மாவட்டத்துக்கு சென்றார். அப்போது அவரது வாகனத்தை ஆந்திர பாஜக தலைவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பாகவும் கண்டன முழக்கம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துள்ளார். என்னிடம் மோத நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்.
பிரதமர் மோடியின் பெயரை வெளியே சென்று சொன்னால் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள். எனவே ஜாக்கிரதையாக இருங்கள். ஆந்திராவில் மோடியை ஆதரிப்பதற்கு பாஜகவினர் வெட்கப்பட வேண்டும் என்று பேசினார்.