'டாய்லெட்' இல்லாத வீட்டில் கல்யாணம் பண்ணாதீங்க: பெண்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை
குண்டூர்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாதம் ஒரு மாவட்டத்துக்கு சென்று மக்களை சந்தித்து குறை கேட்டு வருகிறார்.
நேற்று குண்டூர் மாவட்டம் வினுகொண்டா கிராமத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து பேசிய அவர், ஆந்திராவின் புதிய தலைநகர் குண்டூர் மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
புதிய தலைநகர் அமைக்க ஆந்திராவின் 4.93 கோடி மக்களும் தங்களது பங்களிப்பை தர வேண்டும். அனைவரும் பொருள் உதவி செய்ய வேண்டும். மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும் 3 மணி நேரத்தில் தலைநகரை வந்தடையும் வகையில் சாலை வசதி செய்யப்படும்.
சுகாதாரத்தை பேணும் வகையில் வீட்டுக்கு ஒரு கழிவறை கட்ட அரசு ரூ.12 ஆயிரம் உதவி செய்கிறது. கழிவறையை உபயோகிக்காதவரை மனிதராகவே மதிக்க கூடாது.
கழிவறை இல்லாத புகுந்த வீட்டில் வாழ பெண்கள் மறுப்பு தெரிவித்து பிறந்த வீட்டுக்கு சென்று விட வேண்டும். கழிவறை இருந்தால்தான் அங்கு வருவேன் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்.
கழிவறையை உபயோகித்தால் 20 சதவீதம் நோய் ஓடிப்போய் விடும். இதனை மக்கள் உணர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.