ஆந்திராவில்..சட்டம்-ஒழுங்கு ஐ.சி.யு.வில்...நடவடிக்கை எடுங்க..கவர்னருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்!
அமராவதி: ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அவரது ஆயுதமேந்திய உதவியாளர்களும் தெலுங்கு தேசம் கட்சியின் ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீட்டை அத்துமீறி தாக்கினர் என்று சந்திரபாபு நாயுடு, மாநில கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கொலைகள், கற்பழிப்புகள், உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை தடுக்க அரசு திணறுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
காவல்துறையின் ஒரு பகுதியினர் ஆளும் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், மாநில சட்டம் ஒழுங்கு விவாகரத்தில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
முதல்வர்-சந்திரபாபு நாயுடு மோதல்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலைநகர் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையே கடும் மோதல் உருவாகி வருகிறது.
கவர்னருக்கு கடிதம்
இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி தெலுங்கு தேசம் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீட்டை மர்மநபர்கள் அத்துமீறி தாக்கினர். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என மாநில கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
முன்னாள் எம்.எல்.ஏ வீடு மீது தாக்குதல்
அதில் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளதாவது:- ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 24-ம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அவரது ஆயுதமேந்திய உதவியாளர்களும் ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீட்டை அத்துமீறி தாக்கினர். ஆளும் கட்சி எம்.எல்.ஏ இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீட்டில் உதவியாளரை அவர்கள் காயப்படுத்தி உள்ளனர்.
ஒருதலைபட்சம்
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கொலைகள், கற்பழிப்புகள், உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை தடுக்க அரசு திணறுகிறது. காவல்துறையின் ஒரு பகுதியினர் ஆளும் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீடு மீதான தாக்குதலுக்கு காவல்துறை தீவிரமாக ஆதரவு அளித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் ஆதாரமாக கிடைத்த போதிலும், காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
நடவடிக்கை தேவை
அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர். எனவே ஜே.சி.பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மாநில சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.