ஆசாத் சமாஜ் கட்சி... கன்சிராம் பிறந்த நாளில் தனிக் கட்சியை தொடங்கினார் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்
நொய்டா: வட இந்தியாவில் தலித்துகளின் முகமாக உருமாறி வரும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத். ஆசாம் சமாஜ் கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர ஆசாத்.. வட இந்தியாவில் போலீசாருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிற போராட்டங்களின் தலைவன்.. அண்மையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பல லட்சம் பேரை டெல்லியில் திரட்டி மிரள வைத்தவர்.
பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத்தை சிறையில் அடைத்தது டெல்லி போலீஸ். ஆனாலும் சிறை மீண்ட சந்திரசேகர் ஆசாத் மீண்டும் மீண்டும் போராட்ட களத்தில் நிற்கிறார். அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நீதியின் தத்துவ ஆசான்களின் வழியில் செல்பவர் சந்திரசேகர் ஆசாத்.
தற்போது ஆசாத் சமாஜ் கட்சி என்கிற தனிக்கட்சியை தொடங்கி இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமின் பிறந்த நாளான இன்று தமது கட்சியை தொடங்கி இருக்கிறார் சந்திரசேகர் ஆசாத். தலித்துகளை காப்பாற்ற வந்த ராவணனாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிற இளைஞர் சந்திரசேகர் ஆசாத்.
அவரது விஸ்வரூபம் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தலித் கட்சிகளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே சந்திரசேகர் ஆசாத்தை பல முறை உ.பி.யில் ஆளும் பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தேசபாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை ஏவி இருக்கிறது. இத்தனை தடை உடைத்த சந்திரசேகர் ஆசாத் தேர்தல் அரசியலில் எப்படி ஜொலிப்பார்? என்பது பெரும் எதிர்பார்ப்பு.