சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்!
ஶ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ அனுப்பி வைத்துள்ள சந்திரயான்- 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரம்மாக பிரிக்கப்பட்டது. தற்போது பிரிக்கப்பட்டுள்ள விக்ரம் லேண்டர் வரும் 7-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும்.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 22-ல் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி வைத்தது இஸ்ரோ. இந்த விண்கலம் திட்டமிட்டபடி பூமியை சுற்றி வந்தது.
பின்னர் படிப்படியாக நிலவின் பாதைக்கு சந்திரயான்-2 விண்கலம் திருப்பிவிடப்பட்டு அதன் சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்த சுற்றுப்பாதை வட்டமானது 5வது முறையாக நிலவுக்கு அருகே சந்திரயான் பயணிக்கும் வகையில் நேற்று மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகள் இன்று பகல் 12.45 மணிக்கு தொடங்கியது. சுமார் 1 மணிநேரத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
#ISRO
— ISRO (@isro) September 2, 2019
Vikram Lander Successfully separates from #Chandrayaan2 Orbiter today (September 02, 2019) at 1315 hrs IST.
For details please visit https://t.co/mSgp79R8YP pic.twitter.com/jP7kIwuZxH
இதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரை தரை இறக்கும் பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும். விக்ரம் லேண்டர் வரும் 7-ந் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரை இறக்கப்படும்.
இந்த விக்ரம் லேண்டர் எடுத்துச் செல்லும் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் தொலைவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்ட நிலையில் ஆர்பிட்டரானது நிலவை 100 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து புகைப்படங்களை அனுப்பும்.