லேண்டர் நிலை மர்மம்தான்.. ஆர்பிட்டரிடமிருந்து குட் நியூஸ் வந்துள்ளது.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
Recommended Video
புவனேஸ்வர்: இஸ்ரோவால் சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் ஆர்பிட்டர் "மிகவும் சிறப்பாக" செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் இன்று தெரிவித்தார்.
லேண்டரில் உண்மையில் என்ன தவறு நடந்துள்ளது என்பதை ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. ககன்யான் பணி எங்களது அடுத்த முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.
புவனேஸ்வரில் இன்று நிருபர்களிடம் பேசிய சிவன் மேலும் கூறியதாவது: லேண்டரிடமிருந்து எங்களுக்கு எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை. தேசிய அளவிலான கமிட்டி, லேண்டரில் உண்மையில் என்ன தவறு நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறது. குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அதை பரிசீலித்து எதிர்காலத் திட்டமிடலை மேற்கொள்வோம்.
சந்திரயான் -2 பணி 98 சதவீத இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. லேண்டர் விக்ரமின் பேட்டரியை சார்ஜ் செய்ய இனி சூரிய ஒளி இருக்காது. ஏனெனில், லேண்டர் ஒரு சந்திர நாள் (பூமியின் 14 நாட்களுக்கு சமம்) மட்டும்தான் வேலை செய்யும். அதற்கான கால அவகாசம் தாண்டிவிட்டது.
2020 க்குள் இஸ்ரோ மற்றொரு நிலவு ஆய்வு பணியில் கவனம் செலுத்தும். சந்திரயன் -2 ஆர்பிட்டர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு வருடத்திற்கு வேலை செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு ஏழரை ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் வாய்ப்பு உள்ளது.
K Sivan, ISRO Chief: #Chandrayaan2 orbiter is doing very well. All payload operations have commenced, it's doing extremely well. We have got no signal from lander but orbiter is working very well. A national level committee is now analysing what really went wrong with the lander. pic.twitter.com/XZKC2KKoNO
— ANI (@ANI) September 26, 2019
ஆர்பிட்டரில் எட்டு அறிவியல் கருவிகள் உள்ளன. அனைத்து கருவிகளும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்கின்றன.
எதிர்கால திட்டம் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன ... எதுவும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு சிவன் தெரிவித்தார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி, நிலவின் தென்துருவ மேற்பரப்பில் லேண்டரை சாஃப்ட் லேண்டிங் செய்ய இந்தியா ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை மேற்கொண்டது. ஆனால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அது தரைகட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, லேண்டர் மற்றும் அதற்குள் இருந்த ரோவர் என்ன ஆனது என்பது இதுவரை புரியாத மர்மமாக இருந்து வருகிறது.