சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும்.. இனி தொழில்நுட்ப கோளாறுக்கு வாய்ப்பில்லை.. இஸ்ரோ தலைவர்
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு எதுவும் ஏற்படாது என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை பிற்பகல் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலவர் சிவன் சந்திரயான் 2 நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றகரமாக ஏவப்படும் என்று குறிப்பிட்டார். இதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது.
சந்திரயான் 2 விண்கலத்தை ஏந்தி செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் முழுவதும், ஒன்றை நாட்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்த கோளாறு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு விட்டது. அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
எனவே ஏற்கனவே ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மீண்டும் ஏற்படாது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அவர் இதுவரை யாருமே இறங்கி ஆராய்ச்சி செய்யாத நிலவின் தென்துருவத்தில், சந்திரயான் 2 இறங்க உள்ளது. நிலவில் யாரும் செல்லாத இடத்திற்கு சந்திரயான் 2 செல்வதால், பல முன்னோடி அறிவியல் சோதனைகளை நடத்த வாய்ப்பு உருவாகும் என்றார்.
சந்திரயான் 1 நிலவிற்கு சென்றபோது சந்திரனில் நீர் இருப்பதை கண்டறிந்து தெரிவித்தோம். தற்போது சந்திரயான் 2 மூலம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார் இஸ்ரோ தலைவர் சிவன்.