தொழில்நுட்பக் கோளாறு... சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்- 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு நாளில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முதல் முறையாக, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, 'சந்திராயன் - 2' என்ற விண்கலத்தை, 'இஸ்ரோ' விண்ணில் செலுத்த இருந்தது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை துவங்கியது.
20 மணிநேர கவுன்டவுன் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் 56 நிமிடங்கள் பாக்கியிருந்தபோது, திடீரென ராக்கெட் ஏவும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து க்ரையோஜினிக் எஞ்சினுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டது.
இஸ்ரோ கடந்த, 2008ல், நிலவை ஆய்வு செய்ய, 'சந்திராயன்' என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி, தண்ணீர் இருப்பதற்கான அம்சங்களை ஆய்வு செய்தது. அதன் ஆயுட் காலம், 2009ல் முடிவடைந்தது.
நிலவில், அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள, தற்போது, 'சந்திராயன் - 2' என்ற விண்கலத்தை, இஸ்ரோ, உருவாக்கியுள்ளது. இது, நிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து, ஆய்வு செய்ய உள்ளது.
சந்திராயன் - 2 விண்கலம், விண்ணிற்கு சென்றதும், முதலில், புவி வட்ட பாதையில் வலம் வரும். பின், நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறும். இறுதியாக, செப்., 6ல், நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி, ஆய்வு பணிகளை துவக்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later.
— ISRO (@isro) July 14, 2019
சந்திராயன் -2 திட்டத்தை செயல்படுத்த இந்தியா இதுவரை ரூ.1000 கோடி செலவு செய்துள்ளது. நிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக 'ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய 'லேண்டர்' என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய 'ரோவர்' என்ற சாதனம் என 3 சாதனங்கள் சந்திராயன் -2 ல் இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.