கணக்கு காலி.. கெமிஸ்ட்ரியால் நமக்கு ஜாலி.. வாரணாசியில் மோடி அதிரடி பேச்சு
வாரணாசி: கணிதத்தை கெமிஸ்ட்ரி வெற்றி கண்ட தேர்தல் இது என்று, வாரணாசியில் நடைபெற்ற நன்றியுரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. வாரணாசி தொகுதியில் மீண்டும், போட்டியிட்டிருந்த, பிரதமர் மோடி, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, இன்று மோடி வாரணாசி வருகை தந்தார்.
வாரணாசியில் மோடி
விமான நிலையத்தில் இருந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற, பிரதமர் மோடி அங்கு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். கோவிலுக்கு மோடி காரில் வருகை தந்த போது, சாலையின் இரு மருங்கிலும் கூடிநின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாஜகவையும், மோடியையும் வாழ்த்தி கோஷம் எழுப்பினர். சுமார் 20 நிமிட நேரம் பூஜைகளில் பங்கேற்ற பிறகு, மோடி, அங்கேயிருந்து, வாரணாசியின் கஷ்ட்காலா சங்குல் என்ற பகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டத்ததில் பங்கேற்றார்.
அமித்ஷா பேச்சு
இந்த பொதுக் கூட்டத்தில், அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, வாக்குப்பதிவு முடிவடையும் வரை தொகுதி பக்கம் வராத ஒரு வேட்பாளர் இருந்தால் அது நரேந்திர மோடிதான். ஏனெனில் வாரணாசி மக்கள் அவரை அமோக வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாற்றியுள்ளார் நரேந்திர மோடி சென்றார்.
மோடி உரை
பின்னர், மோடி.. மோடி.. என்ற தொண்டர்களின் வாழ்த்து கோஷங்களுக்கு நடுவே, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் கூறுகையில், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தீவிர களப்பணிகள், இந்த பிரமாண்ட வெற்றியை எனக்கு சாத்தியப்படுத்தியது.
உங்கள் உத்தரவு
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, சுமார் ஒரு மாதங்களுக்கு நீங்கள் தொகுதிக்கு வர வேண்டாம் என்று எனக்கு வாக்காளர்களாகிய நீங்கள் உத்தரவு போட்டிருந்தீர்கள். எனவே தான் நான் இந்த தொகுதி பிரச்சாரத்தை பற்றி கவலைப்படாமல் நாடு முழுக்க சுற்றி வந்தேன். இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு பணியாளர். உங்களது உத்தரவே எனக்கு மிகுந்த முக்கியமானது.
கெமிஸ்டரி வெற்றி
பல்வேறு அரசியல் பண்டிதர்களும், பாஜக இந்த அளவுக்கு மகத்தான வெற்றியை பெறும் என்று கணிக்கவில்லை. ஆனால், மக்களுடன் பாஜகவுக்கு இருந்த கெமிஸ்டரி இந்த, கணிதங்களை தோற்கடித்து மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. அரசியல் பண்டிதர்களின் கணிப்புகளை, ஏழை எளிய மக்களின் ஓட்டுக்கள் முறியடித்து விட்டன.
கொலைகளுக்கு கண்டனம்
எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், ஜம்மு-காஷ்மீரிலும் நமது தொண்டர்கள் கொலை செய்யப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத செயல். பாஜக ஒரு ஜனநாயக கட்சி. நம்மை பொறுத்தளவில், எதிர்க்கட்சிகள் கூறக்கூடிய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் கூட உள்வாங்கி செயல்படுத்த கூடியவர்கள்.
பண்பாட்டை மீட்போம்
நமது முன்னோர்கள் இந்த உலகத்திற்கே பாதையைக் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். அந்த பெருமை மிகு பண்பாட்டையும், வரலாற்றையும் இந்த காலகட்டத்திற்கு தேவையானவாறு மீட்டெடுப்பது தான் நமது பணி. வெளிப்படைத்தன்மையும், கடினமான உழைப்பும் நமக்கு எதிரான சதிகளை எல்லாம் முறியடித்துள்ளது. இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.