பெங்களூருக்கு வாங்க.. கூவி விற்கும் ஆம்னி பஸ்கள்.. காலியாக கிடக்கும் சீட்டுகள் #karnatakabandh
பெங்களூர்: கர்நாடகாவில் நாளை பந்த் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை குறைத்தும் டிக்கெட் வாங்க ஆளில்லை.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, கன்னட சங்கங்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற உள்ளது.
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பந்த்துக்கு, 1100 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மால்களை மூடிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பஸ், ஆட்டோ, டாக்சிகள் பெரும்பாலும் இயங்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை வெளியூர்களில் இருந்து பெங்களூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது.
குறிப்பாக, மிகவும் பிசியான சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் பஸ் டிக்கெட்டுகளை வாங்க ஆளில்லை. வியாழக்கிழமை இரவு சென்னையில் புறப்படும் பஸ்கள், வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் சென்னையிலிருந்து புறப்படும் பஸ்கள் ஸ்டிரைக் நடைபெறும் நேரத்தில் பெங்களூருக்குள் நுழைய வேண்டிவரும் என்பதால் அதில் வருவதற்கு பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.
வார இறுதி நாட்களில் டிக்கெட் முன்பதிவு ஜோராக நடைபெறும். டிக்கெட் விலையை ஏற்றி ஆம்னி பஸ்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள். ஐடி ஊழியர்கள் இவ்விரு நகரங்கள் நடுவே வார இறுதியில், அதிகம் பயணிப்பதும், ஆம்னி நிர்வாகங்களின் டிக்கெட் கொள்ளைக்கு ஒரு காரணம்.
பெங்களூர் டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா கூறுகையில், சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் நாளைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்களிடம் இதுகுறித்து முன்கூட்டியே தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். ஆனால் இந்த வார இறுதியில் ஆம்னி பஸ்களுக்கு பந்த் பெரிய, ஆப்பாக வைத்துவிட்டது.
இதனால் மல்டி ஆக்சில், வோல்வோ சொகுசு பேருந்துகளின் கட்டணம் கூட ரூ.400 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படியும், பல சீட்டுகள் காலியாக கிடக்கின்றன. அதேநேரம், வியாழக்கிழமையான இன்று, இரவு பெங்களூரிலிருந்து சென்னை புறப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் இன்று இரவு பெங்களூர் புறப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் வாங்க ஆளில்லை. சில பஸ்கள் முன்கூட்டியே கிளம்பி, காலை 6 மணிக்கு முன்பு, அதாவது பந்த் தொடங்கும் நேரத்திற்கு முன்பு பெங்களூருக்குள் நுழைய முடிவு செய்துள்ளன.