சென்னையில் "பெஞ்ச்" அமைப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
டெல்லி: மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்க தென் இந்தியாவில் முக்கிய நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் ? இதனை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் என்ன சிரமம் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பான பொதுநல மனுவை, புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர், வசந்தகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
வசந்தகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 1986ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவில் டெல்லியில் மட்டும் உச்சநீதிமன்றம் இருப்பதால், தென் இந்தியாவை சேர்ந்த மக்கள் குஜராத், அசாம், கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் தங்களின் அப்பீல் மற்றும் வழக்கு தொடர்பாக டெல்லிக்கு வர வேண்டியுள்ளது.
இதனால் மக்களுக்கு அதிக அலைச்சல், அதிக செலவினங்கள், காலவிரயம் ஆகிறது. எனவே மும்பை, சென்னை, கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைக்க வேண்டும். இதன் மூலம் ஹைகோர்ட் வழக்கு தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் நீண்ட கால நிலுவை வழக்குகள் என்ற நிலையையும் தவிர்க்க முடியும் என்று தெரிவித்து இருந்தேன்.
இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் 1986ல் உச்சநீதிமன்ற கிளை அமைக்க உத்தரவிட்டது. 20 ஆண்டுகளாக இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த உத்தரவை நிறைவேற்ற கோர்ட் மேலும் ஒரு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார் வசந்தகுமார்.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. பின்னர் ஏன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் மத்திய அரசு மற்றும் சட்ட அமைச்சகம் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசுக்கு இது தொடர்பாக ஆலோசகர்களாக மூத்த வழக்கறிஞர்களான கே.கே.வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை நியமிக்கிறோம். இருவரும் இதில் உள்ள பிரச்னைகளை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர் .