சென்னை வெள்ள பாதிப்புக்கு அதீத தண்ணீர் திறப்பு, ஆக்கிரமிப்புகளே முக்கியக் காரணம்- நாடாளுமன்ற குழு
டெல்லி: சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான வெள்ளம் ஏற்பட, ஏரி மற்றும் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் என்று மத்திய ஆய்வுக்குழு அறிக்கை அளித்துள்ளது. ஏரி மற்றும் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவு நீர் கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்றும் மத்தியக்குழு வலியுறுத்தியுள்ளது.
சென்னை வெள்ளம் செயற்கைப் பேரிடர் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். அது வரலாறு காணத மழையால் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் என்று ஆளும் அதிமுக அரசு தெரிவித்தது.
சென்னை வெள்ளம் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிக மழைப் பொழிவு மற்றும் தொடர் வெள்ளத்தால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை
34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், உள்துறை அமைச்சம் மற்றும் தமிழக அரசு தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2015 டிசம்பரில், இதுவரை பெய்திராத வகையில் அதிக மழைப் பொழிவு காரணமாகவும், தொடர் வெள்ளம் காரணமாகவும் சென்னையில் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வெள்ளம்
நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை, வெள்ளத்தில் சிக்கி 470 பேர் உயிரிழந்ததாகவும், 12 ஆயிரம் கால்நடைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 லட்சத்து 92 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததாகவும், 3 லட்சத்து 83 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்ததாகவும் நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவாக மாறிய சென்னை
சென்னையை சுற்றியுள்ள அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு ஆகியவற்றில் வெள்ளம் நிரம்பி வழிந்ததாகவும், அது அடையாறு நதியில் முழுமையாக வெளியேற இயலாத நிலையில், சென்னையில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெள்ளம் புகுந்து தீவுபோல் மாறியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
அதிக மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கனஅடி நீரை அடையாறு ஆற்றில் திறுந்துவிட வேண்டிய நிலை உருவானதாகவும்,
ஏரியை திறக்கும் முன்பு கூட 47 சென்டி மீட்டர் அளவு மழை பெய்து நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கியதாகவும் தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தத்தளித்த சென்னை
சென்னையில் பல இடங்களில், முதல் மாடி வரை வெள்ளம் புகுந்ததாகவும், சென்னை நகரின் பல்வேறு இடங்களில் ரயில், பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக, அதிக மழை முதல், மிக அதிக மழை வரை பெய்ததால், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புக்கு காரணம்
மத்திய நீர்வளத்துறை அளித்த தகவலின்படி, கனமழை, ஏரிகளின் கொள்ளளவை தாண்டிய அளவு காரணமாக அதிக தண்ணீர் திறக்கப்பட்டது, ஏரி மற்றும் ஆற்றுப் பகுதிகளின் ஆக்கிரமிப்புகள், குறுகிய கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்டவையே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
சென்னையில் மிக மோசமான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதற்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரிகள் மற்றும் ஆறுகள் செல்லும் வழித்தடங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் காரணமாகவே சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய்கள்
மீண்டும் இது போன்றதொரு வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, ஏரி மற்றும் ஆற்றங்கரையோரங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளும் சேர்ந்து தான் வெள்ளநீர் வெளியேறாமல் பல குடியிருப்பு பகுதிகளுக்குள் புக காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகால் வசதிகள்
வடிகால் வசதிகள் சரிவர சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை இது போன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க சென்னை நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியுள்ளது.
மாநில அரசுக்கு வலியுறுத்தல்
சென்னை வெள்ளப் பாதிப்புக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணமாக இருந்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் மாபியா கும்பல் குறித்து மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்வார வேண்டும்
தண்ணீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரப்படுவதில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், சென்னை மாநகராட்சியும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி
வெள்ள பாதிப்புகளை சீரமைக்கத் தேவையான நிதி உதவியை மத்திய அரசு விரைந்து அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், சாலை கட்டமைப்புகளை சீரமைக்கவும் தேவையான நிதியை தமிழக அரசுக்கு விரைந்து வழங்கவும் மத்திய அரசுக்கு ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.