சினிமா பாணியில் பயங்கரம்... ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!
சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளை கும்பல் சுட்டுக்கொன்றது.
Recommended Video
ஜெய்ப்பூர்: சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளை கும்பல் சுட்டுக்கொன்றது. கொளத்தூர் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக் கடையில் கடந்த 16ஆம் தேதி 3½ கிலோ தங்க நகையும், 4½ கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
நகைக் கடையின் மேல் தளத்தில் துளைப்போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாடகைக்கு தங்கியிருந்தவர்கள்
கேமராவில் பதிவான புகைப்படத்தில் உள்ளவர்களும் வாடகைக்கு கடை கேட்டு வந்த வாலிபர்களும் ஒன்றுதான் என்று உறுதியானதால் அவர்களை பற்றிய முழு விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
2 பேருக்கு வலை
தினேஷ் சவுத்திரி (17), நாதுராம் (25) ஆகிய இருவரும் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நாதுராமின் தந்தை உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் சென்ற போலீஸ்
இதையடுத்து அவர்களை தேடி 4 தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். இன்று அதிகாலை போலீஸார் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி
அப்போது கொள்ளையர்கள் தனிப்படை போலீசாரை நோக்கிய சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டுபாய்ந்து சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்தார்.
மற்றொரு இன்ஸ்பெக்டர் காயம்
படுகாயமடைந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் விரைகிறது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக போலீஸ் ராஜஸ்தான் விரைகிறது. சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் சந்தோஷ்குமார் ராஜஸ்தான் செல்ல உள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.