21 வருடங்களாக நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிசுக்கு மூடுவிழா! புனேக்கு இடம்மாறிய போட்டித்தொடர்
புனே: சென்னையின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக விளங்கிய 'சென்னை ஓபன் டென்னிஸ்' 21 வருடங்களுக்கு பிறகு மகாராஷ்டிரா ஓபன் என்ற பெயருடன் புனே நகருக்கு இடம் பெயர்ந்துவிட்டது.
தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ், சென்னை ஓபன் போட்டியாகும். 1997ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகள் சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடந்தது. தமிழக அரசு இந்தப்போட்டிக்கு நிதிஉதவி அளித்துவந்தது.
இந்த நிலையில், இப்போட்டித் தொடர் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி புனேக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது என்று நேற்றே செய்திகள் வெளியாகின.. வர்த்தக நலன் கருதி இந்தப் போட்டியை சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்ற போட்டி அமைப்பு குழுவான ஐ.எம்.ஜி. திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே இந்த அறிவிப்பு இன்று வந்துவிட்டது. மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் அடுத்த ஆண்டு முதல் புனேவில் இந்த டென்னிஸ் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஏடிபி தொடர் எங்கள் மாநிலத்திற்கு வருவதற்கு பெருமைப்படுகிறோம். இதை மேலும் மெருகேற்ற ஒத்துழைப்போம். தொடர்ந்து எங்கள் மாநிலத்தில் இப்போட்டித்தொடர் நடைபெற உதவிகளை செய்வேன் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முயற்சி
இந்த டென்னிஸ் போட்டியை சென்னையில் நடத்துவதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து இப்போட்டிகள் இங்கு நடைபெறவும் தொடர்ந்து அவர் ஆதரவு அளித்து வந்தார்.
ஆட்சியாளர்கள் தோல்வி
திமுக ஆட்சியிலும் உதவிகள் தொடர்ந்தன. ஆனால் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், அந்த டென்னிஸ் தொடரை சென்னையில் நடத்தும் பெருமையை தக்க வைப்பதில் தற்போதைய ஆட்சியாளர்கள் தோற்றுவிட்டனர்.
வெளியாகிறது அறிவிப்பு
சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி புனேக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. வர்த்தக நலன் கருதி இந்தப் போட்டியை சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்ற போட்டி அமைப்பு குழுவான ஐ.எம்.ஜி. திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
ஏடிபி டென்னிஸ் சென்னையில் இருந்து புனேக்கு மாற்றம் செய்யப்பட்டால் சென்னை டென்னிஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைவார்கள், மேலும் தமிழக டென்னிஸ் வீரர்களின் உத்வேகத்தை அது குலைத்துவிடும்.