சுவாதி கொலை வழக்கு.. பெங்களூர், மைசூரில் தனிப்படை முகாம்! பின்னணியில் பரபரப்பு தகவல்
பெங்களூர்: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மைசூர் மற்றும் பெங்களூருவில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளியின் உருவ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகேயுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய, சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் மக்கள் நெருக்கம் மிகுந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வாலிபர் ஒருவரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலையாளியை யாரும் பிடிக்க முயலாத நிலையில், அவன் எளிதாக தப்பி சென்றுவிட்டான். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், ரயில் நிலையத்தின் அருகேயுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த தனியார் கேமிராக்களில் பதிவான உருவத்தை வைத்து அது கொலையாளியாக இருக்கும் என காவல்துறை சந்தேகிக்கிறது.
சென்னை போலீஸ்
ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி எந்த துப்பும் கிடைக்காத நிலையில், சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு, அந்த வழக்கு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
ஆதார் அட்டை
இந்த வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடும் பணி நடக்கிறது. சம்பவ இடத்தில் பதிவான கைரேகையை வைத்து, ஆதார் அடையாள அட்டை பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் தகவல் கேட்டுள்ளனர்.
ஏன் விசாரணை
இந்நிலையில், தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் மைசூரு மற்றும் பெங்களூரில் முகாமிட்டு விசாரணையை தொடக்கியுள்ளனர். இன்போசிஸ் நிறுவனத்தின் பயிற்சி மையம் மைசூரில் உள்ளது.
பயிற்சி, பணி
கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ மூலம், இன்போசிஸ் நிறுவனத்தில், வேலை கிடைத்ததும், சுவாதிக்கு மைசூர் இன்போசிஸ் மையத்தில் வைத்து தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை முடித்த பிறகு, சுவாதி சில காலம், இன்போசிஸ் தலைமையகம் அமைந்துள்ள பெங்களூரில் ஒரு பிரிவில் பணியாற்றியுள்ளார்.
மோதல் இருந்ததா?
மைசூரு மற்றும் பெங்களூருவில் சுவாதி பணியாற்றிய காலங்களில் அவருடன் எந்த நபருக்காவது மோதல் இருந்ததா, ஒரு தலை காதல் பிரச்சினை இருந்ததா என்பது பற்றியெல்லாம், இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சக ஊழியர்களிடம் விசாரணை
இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள், முன்பு பணியாற்றிய சக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஏதாவது தகவல் கிடைக்கலாம் என போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.
உருவ படம்
இதனிடையே, சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளில் கொலையாளி என சந்தேதிக்கப்படுபவரின் உருவம் தெளிவாக தெரியவில்லை என்பதால், அந்த உருவத்தின் அடிப்படையில், உருவ படம் வரைந்து ஊடகங்கள் மூலமாக அதை வெளியிட்டு, மக்களின் உதவியை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர்.