முஸ்லிம்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டதற்கு பழிவாங்க சென்னை ரயிலில் குண்டு வைத்த சிமி தீவிரவாதிகள்
பெங்களூரு: முஸ்லிம்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டதற்கு பழிக்கு பழிவாங்குவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூரு-குவஹாத்தி ரயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம் என்று ஒடிஷாவில் பிடிபட்ட சிமி தீவிரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ந் தேதி பெங்களூரு-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. சிறிது நேரதில் அந்த ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.
குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒடிஷாவில் சிமி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மத்திய பிரதேச சிறையில் இருந்து தப்பியவர்கள். ஆகையால் மத்திய அம்மாநில தீவிரவாத தடுப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தாங்கள்தான் என மூவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். அதாவது 2012ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்தில் 14 முஸ்லிம்கள் பெங்களூர்-குவஹாத்தி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் பெங்களூர்-குவஹாத்தி ரயிலில் குண்டுகளை வைத்தோம்; குறிப்பாக சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் பாதுகாப்பு கெடுபிடி குறைவாக இருக்கும் என்பதால் சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடைந்த உடன் குண்டுகள் வெடிக்குமாறு பொருத்தினோம் எனவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
அதேபோல் 2014-ம் ஆண்டு புனே காவல்நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தாமே பொறுப்பு மற்றொரு தீவிரவாதி வாக்குமூலம் அளித்திருக்கிறார். 2012ஆம் ஆண்டு சிமி தீவிரவாதி ஒருவரை போலீசார் கொன்றதற்கு பழிவாங்க அந்த குண்டுவெடிப்பை நிகழ்ச்சியதாகவும் அந்த தீவிரவாதி தெரிவித்திருக்கிறார்.