தொடர் கதை... ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற மற்றொரு சென்னை இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்!!
டெல்லி: உலகின் மிக பயங்கரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற சென்னையைச் சேர்ந்த முகமது நஷீர் என்ற இளைஞர் சூடானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 23 வயது சாப்ட்வேர் என்ஜினியரான முகமது நஷீர் ஆன்லைன் மூலமாக துபாயில் உள்ள ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் நபருடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நஷீர் துபாய் சென்றிருக்கிறார்.
பின்னர் அவரை துருக்கி வழியாக சிரியாவுக்குள் வராமல் சூடான் சென்று அங்கிருந்து லிபியா வழியாக சிரியாவுக்குள் வருமாறு ஐ.எஸ். இயக்கம் அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது. இதற்கான சூடானுக்கு முதலில் செல்வதற்கான விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் நஷீர் செய்திருந்தார்.
நஷீரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த சூடான் அதிகாரிகள் இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சூடான் வந்திறங்கிய நஷீரை அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
டெல்லி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்திறங்கிய முகமது நஷீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இதேபோல் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்று துருக்கியில் பிடிபட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர். ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் இந்திய இளைஞர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்கிற மத்திய உளவுத்துறை.
இந்த நிலையில் மேலும் ஒரு சென்னை இளைஞர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.