இன்னமும் ஓயாத சர்ச்சை... உலகிலேயே அதிக மழை பொழிவு இருக்கும் இடம் எது?
உலகிலேயே அதிக மழைப் பொழிவு உள்ள இடம் எது என்பதில் தொடரும் சர்ச்சை.
Recommended Video
ஷில்லாங்: உலகிலேயே அதிக மழைப் பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சியா? மெளசின்ராமா? என்பது இன்னமும் ஓயாத சர்ச்சையாக விவாதப் பொருளாகவே உள்ளது.
பொதுவாக உலகின் மிகவும் ஈரமான பகுதி, அதிக மழைப் பொழிவு உள்ள பகுதி என மேகாலயாவின் சிரபுஞ்சியைத்தான் குறிப்பிடுவது உண்டு. ஆனால் அதே மேகாலாயாவின் மெளசின்ராம் என்கிற கிராமம்தான் அதிக மழைப் பொழிவைக் கொண்டது என்கிற சர்ச்சையும் இருந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை பரவலாக வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி, கோவையில் இடைவிடாது கொட்டி தீர்க்கிறது மழை. பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
அதேபோல் தமிழகத்தின் சிரபுஞ்சியான சின்ன கல்லாறில் இடைவிடாது மழை கொட்டுகிறது என்கிற போதுதான் இந்த சர்ச்சையும் நினைவில் வந்து போகிறது. ஆம் அதிக மழைப் பொழிவு கொண்டது சிரபுஞ்சியா? மெளசின்ராமா? என்பதுதான் இந்த சர்ச்சை.
இரண்டுமே மேகாலயாவில்தான் சுமார் 16 கிமீ தொலைவில் உள்ளன. ஆனால் சிரபுஞ்சியை உலகம் அறிந்த அளவுக்கு மெளசின்ராம் கிராமத்தை அறிந்தது இல்லை.
சரி இந்த இரண்டு பகுதிகளுக்கும் பெருமழை எப்படி கிடைக்கிறது தெரியுமா? வங்காள விரிகுடா கடலில் இருந்து வீசுகிற ஈரக்காற்று வங்கதேசத்தின் சமவெளிகளைக் கடந்து முதலில் மோதுவது மேகலாயாவின் மலைகள் மீதுதான். இதனால்தான் மெளசின்ராம் கிராமமும் சிரபுஞ்சியும் மழையால் நனைந்து கொண்டே இருக்கின்றன.
இரு இடங்களிலும் சராசரியாக 1100 செ.மீக்கு மேல் மழை பெய்கிறது. இரு இடங்களுக்கும் மழை அளவு சதவீதம் 100 முதல் 200 செ.மீ. வரை வித்தியாசப்படுத்தி வாதிடப்படுகின்றன.