துபாயில் இருந்து பறந்துவந்து ஓட்டுப் போட்ட கிரிக்கெட் வீரர் புஜாரா
ராஜ்கோட்: 7வது ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த புஜாரா இன்று நாடு திரும்பி ராஜ்கோட்டில் வாக்களித்துவிட்டு மீண்டும் விளையாடுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
7வது ஐ.பி.எல். போட்டிகளில் அசத்திக் கொண்டிருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார் சட்டேஸ்வர் புஜாரா. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் புஜாரா. இன்று அங்கு லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள்.
இதனால் துபாயில் இருந்து நாடு திரும்பிய புஜாரா இன்று காலை ராஜ்கோட்டில் தமது குடும்பத்தினருடன் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, இன்று எந்த ஒரு ஐ.பி.எல். போட்டியிலும் இல்லை. இதனால் அணியின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று இங்கு வந்தேன்.
அனைத்து வாக்காளர்களும் உரிய நேரத்தில் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் இளைஞர்கள் தங்களது கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
நான் யாருக்கு வாக்களித்தேன் என்பது ரகசியமானது. வாக்களிப்பது கடமை என்பதை விளம்பரப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கிறேன். அதனால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துகிறேன் என்றார்.