சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையேயான சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை வீரர்களும் முகாமிட்டுள்ளனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சக வீரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதனால் சக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இம்மோதலில் மொத்தம் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரரும் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.