மகா., ராஜஸ்தான், குஜராத் வழியில் பா.ஜ.க. ஆளும் சத்தீஸ்கரிலும் இறைச்சி விற்பனைக்கு தடை!
ராய்ப்பூர்: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைப் பின்பற்றி சத்தீஸ்கர் மாநிலமும் ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
ஜைன மதத்தினரின் உண்ணாவிரத பண்டிகை காலத்தை முன்னிட்டு 4 நாட்கள் முதல் ஒரு வார காலத்துக்கு இறைச்சி விற்பனைக்கு பாரதிய ஜனதா ஆளும் மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் இதே காரணத்துக்காக இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆட்சியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர மாநிலத்து உயர்நீதிமன்றம் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது.
தற்போது பா.ஜ.க. ஆளும் மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரும் ஜைன மதத்தினர் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அம்மாநில முதல்வர் ரமண்சிங் இன்று இதனை அறிவித்துள்ளார்.