சத்தீஸ்கர்: காய்ச்சல் பாதித்த பெண்ணை 7 கி.மீ தோளில் சுமந்த சிஆர்பிஎப் வீரர்கள்- வைரலாகும் வீடியோ
சத்தீஸ்கரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை 7 கி.மீ. தோளில் சிஆர்பிஎப் வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருக்கும் தண்டேவடா வனப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன பெண்ணை 7 கி.மீ தொலைவுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிஷா, சத்தீஸ்கர் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கிறது. மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
தண்டேவடா வனப்பகுதி
சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமான பகுதி. இப்பகுதியில் மலைப் பகுதியில் பழங்குடி இன பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் செல்ல இயலாது
அந்த கிராமத்துக்கு செல்ல காட்டுப் பாதைதான் உள்ளது. ஆகையால் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாது.
7 கிமீ தூக்கி வந்த வீரர்கள்
இதையடுத்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து தோளில் சுமந்தபடியே 7 கி.மீ நடந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஒற்றையடிப்பாதையில் ஓடைகளைக் கடந்து பெண்ணை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுமந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
|
மாவோயிஸ்டுகள்
ஒடிஷா, சத்தீஸ்கர் மாநிலங்களில் மலைப்பகுதிகளில் சாலைகள் அமைக்க விடாமல் மாவோயிஸ்டுகள் தடுப்பது வாடிக்கை. ஆகையால் இத்தகைய கிராமங்கள் இன்னமும் சாலை வசதிகள் எட்ட முடியாதவையாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.