சகோதரனால் சீரழிக்கப்பட்டு, விற்கப்பட்ட சட்டிஸ்கர் பெண்... கற்பனைக்கும் எட்டாத சித்திரவதை!
டெல்லி: எனது வாழ்க்கையில் அந்த 3 மாதத்தை என்னால் மறக்க முடியாது. தினசரி நான் சீரழிக்கப்பட்டேன். எனது சொந்த சகோதரனே என்னை விற்று விட்டான் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் சட்டிஸ்கரைச் சேர்ந்த 23 வயது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்.
பச்பசன் பச்சாவோ அந்தோலன் என்ற என்ஜிஓ அமைப்பின் அலுவலகத்தில் வைத்து தனது சோகக் கதையை விவரித்துள்ளார் அப்பெண். சட்டிஸ்கரைச் சேர்ந்த இவரை ஒன்று விட்ட சகோதரன் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திற்கு சுற்றுலா போகலாம் என்று கூறி கூட்டி வந்தார்.
ஜாலியாக இருக்கும் என்று நினைத்து வந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கை துயரமாகி் போனது. கும்லா வந்ததும், ரோஹித் என்பவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விற்று விட்டார் அப்பெண்ணின் சகோதரன். அதன் பின்னர் ரோஹித்தாலும், அவனைச் சேர்ந்த கும்பலாலும் தொடர்ந்து 3 மாதங்கள் பலாத்காரத்திற்கு உள்ளானார் இப்பெண்.
அடி உதை சித்திரவதை
தினசரி பாலியல் பலாத்காரம் நடந்ததோடு அடி உதை சித்திரவதையும் இந்தப் பெண்ணை வாட்டி எடுத்தன. பிளேடால் கிழிப்பது, ஷூ, பெல்ட்டால் அடிப்பது என்று சித்திரவதை தொடர்ந்தது.
உடலெங்கும் காயம்
ரோஹித் கும்பலின் தாக்குதலால் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் காயங்கள்தான் மிஞ்சின. அந்தப் பெண்ணின் உடலில் காணப்படும் வடுவே அவர் பட்ட சித்திரவதையை வெளிக்காட்டுவதாக உள்ளது.
எத்தனை தடவை என்று தெரியவில்லை
நான் எத்தனை முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு என்னை கொடுமைப்படுத்தினர் என்கிறார் அந்தப் பெண்.
கும்லாவிலிருந்து டெல்லிக்கு
கும்லாவில் விற்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இப்பெண் பின்னர் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு நிஹல் விஹார் என்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மீண்டும் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டார்.
வேலை செய்த ஊதியத்தையும் அபகரித்தான்
வீட்டு வேலைக்கு இப்பெண்ணை அனுப்பிய ரோஹித், அதற்கான சம்பளத்தையும் பறித்துக் கொண்டு அந்த வகையிலும் இப்பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளான்.
கொலை மிரட்டல்...
இந்த நிலையில் மகளின் நிலை குறித்து அறிந்த பெற்றோர் ரோஹித்தைச் சந்தித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 30 ஆயிரம் தந்தால் அப்பெண்ணை அனுப்பி விடுவதாகக் கூறி ரோஹித், இந்த விவகாரத்தைப் போலீசிற்கு கொண்டு சென்றால் குடும்பத்தோடு எரித்துக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளான்.
30,000 கொடுத்து மீண்டார்
அதனைத் தொடர்ந்து நிலத்தை விற்று, ரூ. 30 ஆயிரம் கொடுத்து தனது மகளை மீட்டுச் சென்றுள்ளார் அவரது தந்தை. அப்படியும் ரோஹித் அப்பெண்ணை விடவில்லை. வீட்டில் தனிமையில் இருந்த போது மீண்டும் அப்பெண்ணை ரோஹித் கடத்தியுள்ளான்.
ஹனி டிராப் ஆக பயன்படுத்தத் திட்டம்
‘இந்த முறை என்னை வைத்து வேறு திட்டம் போட்டனர். என்னை வைத்து பணக்காரர்களை மயக்கி பணம் பறிக்கும் திட்டமே அது. ஒரு வீட்டில் என்னை வேலைக்காரி போல நடிக்க வைத்து அவர்கள் சொன்னது போல செய்யச் சொன்னார்கள். அந்த வீட்டு உரிமையாளர் மீது பலாத்காரம் செய்து விட்டதாக புகார் கூறக் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன்.
தப்பி வந்தார்
இந்தக் கும்பலிடம் சிக்கி இப்படி பல கொடுமைகளைச் சந்தித்து வந்த நான் ஒரு வழியாக தப்பி எனது பெற்றோரை வந்தடைந்தேன். அதன் பின்னரே போலீஸில் புகார் கொடுத்தேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.