நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் உடைகள் குப்பையில்... விசாரணைக்கு உத்தரவு
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலால் உயிரிழந்த 14 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் ரத்தம் தோய்ந்த உடைகள் குப்பையில் இருந்து மீட்கப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 14 பேர் உயிரிழந்தார்கள். மேலும், 12 வீரர்கள் காயமடைந்தனர்.
பலியான 14 வீரர்களின் உடல்களும் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அப்போது அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் உடமைகளை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அகற்றியதாகவும், பின்னர் அவை குப்பையில் வீசப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
வீரமரணம் அடைந்த வீரர்களின் உடைகள் இவ்வாறு குப்பையில் வீசப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இது தொடர்பாக, வீரமரணம் அடைந்த வீரர் குல்தீப் என்பவரது தந்தை தரம்பால் புனியா, ‘நக்சலைட்டுகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடைகளுக்கு அரசு தரும் மரியாதை இது தானா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், ‘வெறும் நிவாரண தொகை அனைத்தையும் ஈடுகட்டி விடாது. நாங்கள் எங்கள் மகனை இழந்துள்ளோம். ஆனால் அவரது உடைகளை அரசு குப்பையில் வீசியுள்ளது. இதே ஒரு அரசியல்வாதியின் மகனாக இருந்தால், இவ்வாறு செய்திருப்பார்களா?' என வேதனை தெரிவித்துள்ளார்.
பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.