கோவாக்சின் தடுப்பூசி மீது..நம்பிக்கை இல்லைங்க..அது வேண்டாம்..சத்தீஸ்கர் அமைச்சர் எதிர்ப்பு!
ராய்ப்பூர்: கோவாக்சின் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை என்றும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த கூடாது என்றும் சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ கூறினார்.
கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை நடந்து வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
தடுப்பூசிதான் தீர்வு
உலக நாடுகளை தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. இதனால் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டன.இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
மத்திய அரசு அனுமதி
இதனால் தடுப்பூசி எப்போது வரும் என மக்கள் ஏங்கி தவித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி ஆகும்.
கோவாக்சின் தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி இந்தியா முழுவதும் 25-க்கும் மேற்பட்ட மையங்களில் 26,000 பங்கேற்பாளர்களுக்கு மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான டி.சி.ஜி.ஐ ஒப்புதலைப் பெற்றதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளுக்காக உள்ளதால் அதனை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ கூறினார்.
எனக்கு நம்பிக்கை இல்லை
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை நடந்து வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் முழுமையான முடிவுகள் வெளிவரும் வரை கோவாக்சின் தடுப்பூசி பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். எங்கள் மாநிலத்தில் இந்த தடுப்பூசி அனுமதிக்கப்படக்கூடாது. இந்த தடுப்பூசியை ஏற்குமாறு மக்களிடம் சொல்வதில் எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை என்று டி.எஸ்.சிங் தியோ தெரிவித்து உள்ளார்.