பாஜக அமைச்சரின் காமலீலைகளை வெளியிட்ட சத்தீஸ்கர் மூத்த பத்திரிகையாளர் கைது!
பாஜக அமைச்சரின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட வழக்கில் சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.
டெல்லி: டெல்லியில் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை சத்தீஸ்கர் போலீஸார் கைது செய்தனர். அமைச்சரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லியில் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் கைது செய்தது சட்டீஸ்கர் மாநில போலீஸ்.டெல்லி காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிகாலை வந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் போலீசார் அவரை கைது செய்து முதலில் டெல்லியில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வினோத் வர்மா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 384, 507 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில்இவர் ஏற்கெனவே பிபிசி இந்தி சேவையிலும், இந்தி நாளேடான அமர் உஜாலாவிலும் பணியாற்றியவர்.சத்தீஸ்கர் மாநில சமூகப் பிரச்சினைகள் குறித்து வினோத் வர்மா நீண்ட காலமாக எழுதி வந்தார்.
சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க உறுப்பினர் பிரகாஷ் பஜாஜ் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னிடம் பா.ஜ.க அமைச்சர் ஒருவரின் காமலீலைகள் அடங்கிய சி.டி.,க்கள் இருப்பதாகக் கூறி பணம் பறித்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இதுகுறித்து பேசிய போலீஸார், அவரது வீட்டில் இருந்து 500 சிடிக்களை கைப்பற்றியதாக கூறுகின்றனர். வினோத் வர்மா எழுதும் செய்திகள் அரசுக்கு ஆத்திரமூட்டியதாகவும், இந்தக் கைது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
இது பத்திரிகை உரிமையை ஒடுக்கும் செயல், இதை சகித்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) அமைப்பின் சத்தீஸ்கர் மாநிலப் பிரிவின் தலைவர் லக்கன் சிங். மூத்த பத்திரிகையாளர்கள் பலர் இந்தக் கைதை கண்டித்துள்ளனர்.