13 பெண்களின் உயிர் குடித்த ‘துருப்பிடித்த’ கருவிகள்... சட்டீஸ்கர் பலி குறித்த பரபரப்புத் தகவல்கள்!
பிலாஸ்பூர்: நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, சட்டீஸ்கர் கருத்தடை முகாமில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணம், அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவர்கள் பயன்படுத்திய துருப்பிடித்த கருவிகள் அல்லது போலியான மருந்துகள் தான் எனக் கூறப்படுகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் என்ற பகுதியில் உள்ள நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8-ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது.
இதில், அந்த பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் கலந்துக்கொண்டதில், 83 பெண்களுக்கு கருத்தடைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற பெண்கள் அனைவரும் ஒரு நாள் ஓய்வுக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
14 பேர் பலி...
இந்நிலையில், சிகிச்சைப் பெற்ற பெண்களில் சிலருக்கு தொடர் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 13 பெண்கள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிகிச்சை...
மேலும், கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர்களில் சுமார் 10க்கும் அதிகமான பெண்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு உத்தரவு...
இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவும் சிகிச்சையில் கோளாறு ஏற்பட காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சட்டீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது.
நிதியுதவி...
கருத்தடை சிகிச்சை செய்த 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். மருத்துவர் குப்தா கைது செய்யப் பட்டுள்ளார். உயிரிழந்த பெண்களின் குடும்பத்துக்கு அரசு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது
தொற்றுக் கோளாறு...
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என அம்மாநில சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர் சிங் தெரிவித்திருந்தார்.
துருப்பிடித்த கருவிகள்...
ஆனால், அறுவைச் சிகிச்சையின் போது துருப்பிடித்த கருவிகள் அல்லது போலியான மருந்துகள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். மரணமடைந்த மற்றும் சிகிச்சைப் பெற்று வரும் பெண்களின் நோய்த் தொற்றுக்கான காரணம் அதுவாகத் தான் இருக்க வேண்டும் என அம்மாவட்ட அரசு அதிகாரியான சித்தார்த் கோமல் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
சிறப்பு மருத்துவக் குழு...
ஆனபோதும், உறுதியான தகவல்கள் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக டெல்லியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு ஒன்று பிலாஸ்பூர் சென்றுள்ளது.
முந்தைய சம்பவங்கள்...
இவ்வாறு அரசு முகாம்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப் படுவது சட்டீஸ்கரில் இது முதல்முறையல்ல. முன்னதாக கடந்த 2011 முதல் 2013 வரை சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றவர்களில் 44 பேர் பார்வை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.